தமிழ் 8 ஆம் வகுப்பு
மூன்றாம் பருவம்
இயல் ஒன்று
செய்யுள் :

இராமலிங்க அடிகளின்
திருவருட்பா

Bright Zoom Tamil,



திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியாறா தயார்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

- இராமலிங்க அடிகள்

பொருள்:

"நீரின்றி வாடித் துவண்டுகிடந்த பயிர்களைக்கண்ட போது மனம் பெரிதும் வாட்டமடைந்தேன்.
வயிறார உண்ணும் வாய்ப்பின்றிப் பசித்துயரால் களைப்புற்று, வீடுதோறும் இரந்தும் போதிய உணவின்றி உடல்மெலிந்த வறியோரைக் கண்டு உள்ளம் பதைப்புற்றேன் தீராத கொடிய பிணியால்  துன்புற்றோரைக் கண்டு உள்ளம் துடித்தேன். பிறரிடம் இரப்பதற்கு நாணி உடலும் உள்ளமும் நைந்த ஏழைகளைக் கண்டு உள்ளம் மெலிவுற்றேன்" என வள்ளலார், தம் மனத்துயரை வெளிப்படுத்துகிறார்.

சொற்பொருள் :

பசியறாது  - பசித்துயர் நீங்காது
அயர்ந்த - களைப்புற்ற
நீடிய - தீராத

ஆசிரியர் குறிப்பு :

பெயர்  :
இராமலிங்க அடிகளார்

பெற்றோர் :
இராமையா சின்னம்மை

ஊர்  :
சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூர்

சிறப்புப் பெயர்  :
திருவருட்பிரகாச வள்ளலார்.

காலம்  :
05.10.1823 முதல் 30.01.1874 வரை

சிறப்பு :
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்தியஞானசபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை
நிறுவினார்.

இயற்றிய நூல்கள் :

1. திருவருட்பா
2. சீவகாருண்ய ஒழுக்கம்
3. மனுமுறை கண்ட வாசகம்.


நூற்குறிப்பு :

திரு + அருள் + பா = திருவருட்பா, இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், 
இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகையாகப் பொருள் கூறலாம். இஃது ஐயாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பாடல்களைக் கொண்டது. இப்பாடல் பிள்ளைப் பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

Tnpsc Notes

1) 'வாடிய பயிரை கண்டபோ தெல்லாம்' என்ற வரியை பாடியவர் யார்?
= இராமலிங்க அடிகளார்

2) இராமலிங்க அடிகளாரின் சிறப்புபெயர் யாது?

திருவருட்பிரகாச வள்ளலார்.

3) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?

மருதூர்.

4) இராமலிங்க அடிகளார் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கிய ஆண்டு எது?

- 1865

5) இராமலிங்க அடிகளார் சத்திய தருமச்சாலையை தொடங்கிய ஆண்டு?
= 1867

6) இராமலிங்க அடிகளார் சத்தியஞான சபை தொடங்கிய ஆண்டு எது?

- 1872

7) இராமலிங்க அடிகளார் இயற்றியவேறு நூல்கள் யாது?

திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம்


8) "வாடிய பயிரை கண்டபோ தெல்லாம்' என்ற வரி இடம் பெற்றுள்ள பாடப்பகுதி எது?

- பிள்ளைபெரு விண்ணப்பம்

9) பிள்ளைபெரு விண்ணப்பம் என்றபகுதி இடம்பெற்றுள்ள நூல் எது?